×

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக குவியும் நன்கொடைகள்.. இதுவரை ரூ.1,511 கோடி வசூல்

அயோத்தி : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.1,511 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாக அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது.

ராமர் கோயிலை கட்ட சுமார் ரூ.1,100 கோடி செலவாகும் என்று கோயில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த பின்னணியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக நன்கொடை திரட்டும் பணி கடந்த 15-ம் தேதி தொடங்கியது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல் நபராக ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார். நாடு முழுவதும் 5.25 லட்சம் கிராமங்களில் நன்கொடை வசூல் செய்யும் பணி வரும் பிப்ரவரி 27-ம் தேதி வரை முழுவீச்சில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கூறுகையில் “ அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இந்த தேசமே நிதியுதவி வழங்கி வருகிறது. 4 லட்சம் கிராமங்களை அடைந்து, 11 கோடி குடும்பங்களைச் சந்தித்து நன்கொடை பெற வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளோம்.மக்கள் ராமர் கோயில் கட்டுவதற்கு தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி வருகிறார்கள். 492 ஆண்டுகளுக்குப்பின் மக்கள் மீண்டும் மிகப்பெரிய தர்மத்தைச் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.இதுவரை ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1,511 கோடி நன்கொடையாக அறக்கட்டளை திரட்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.

Tags : Ayodhya ,Ram Temple , Ayodhya, Ram Temple
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...