சென்னை: கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழ் தேசிய முன்னணி இயக்க தலைவர் பழ.நெடுமாறன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனாவுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் என பலர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழ் தேசிய முன்னணி இயக்க தலைவர் பழ.நெடுமாறன் (87), கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவருக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தன. இதனால், நேற்று அவர் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. நேற்று சோதனை முடிவு வந்த நிலையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு சி.டி.ஸ்கேன் போன்ற சோதனைகள் செய்த நிலையில் நுரையீரலில் எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறனிடம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.