கொல்கத்தா: திரிணாமுல் கட்சியும், மம்தாவின் மருமகனையும் அமித் ஷா தாக்கி பேசிய நிலையில், அவரது மகனுக்கு எங்கிருந்து பணம் வந்தது? என்று மம்தா பானர்ஜி காட்டமாக பேசினார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் நிகழ்ச்சியில் உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பானர்ஜி, ‘மத்திய வங்கியால் மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட நிதியை திரிணாமுல் காங்கிரஸ் அரசு தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக அமித் ஷா பேசியுள்ளார். அவர் விடுவித்துள்ள குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். அதை நிரூபிக்க முடியாவிட்டால் மோடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் (அமித் ஷா) எங்களது கட்சியையும், எனது உறவினரையும் குறிப்பிட்டு (மருமகன் அபிஷேக்) தாக்கி பேசுகிறீர்கள்.
உங்கள் மகன் மிஸ்டர் ஷா (அமித் ஷா மகன் ஜெய் ஷா) குறித்து நான் பேசட்டுமா? அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து கிடைத்தது? அனைத்து அரசியல் கட்சிகளும் கண்ணியத்தை காக்க வேண்டும். மக்களை தவறாக வழிநடத்த சமூக ஊடகங்களில் பாஜக போலி செய்திகளையும், போலி வீடியோக்களையும் பரப்புகிறது. உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா போன்ற மாநிலங்களில் நடக்கும் கொடூரங்களை மேற்குவங்கத்தில் அனுமதிக்க மாட்டேன். மேற்குவங்கம் அமைதியாக இருக்க பாடுபடுவேன். நான் சாலையில் நின்று போராடுகிறேன். இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் உங்கள் (பாஜக) அணியில் சேருவார்கள். நாங்கள் தனியாக போராடுவோம்.
நான் ஒரு கோல்கீப்பராக மாறுவேன். உங்களில் எத்தனை பேர் கோல் அடிக்க முடியும் என்று பார்க்கிறேன். பாஜக ஆட்சி செய்த மாநிலங்களில் விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் தாக்கப்படுகிறார்கள். வங்காளத்தின் கலாசார பெருமையை காப்பாற்ற அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நம்பிக்கை அடிப்படையிலான குழுக்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் எங்களது அரசை ஆதரிக்க வேண்டும்’ என்று பேசினார்.