பெங்களூரு: கட்சியில் கூடுதல் செயல் தலைவர்களாக முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டி மற்றும் முன்னாள் மக்களவை உறுப்பினர் துருவ நாராயண் ஆகியோர் வரும் 22-ம் தேதி பொறுப்பேற்க உள்ளனர். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் அக்கட்சி தலைமை முன்னாள் அமைச்சர் ராமலிங்கரெட்டி மற்றும் முன்னாள் மக்களவை உறுப்பினர் துருவ நாராயண் ஆகியோரை கட்சியின் கூடுதல் செயல் தலைவர்களாக கடந்த மாதம் நியமனம் செய்தது. அவர்கள் இருவரும் இன்னும் பொறுப்பேற்காமல் உள்ளனர். இந்நிலையில் கட்சி பணியில் அவர்கள் முழுமையாக ஈடுபடும் வகையில் வரும் 22ம் தேதி பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நடக்கும் விழாவில் இருவரும் பொறுப்பேற்கிறார்கள்.
இந்நிலையில் மாநிலத்தில் காலியாக இருக்கும் பெலகாவி மக்களவை தொகுதி மற்றும் மஸ்கி, சிந்தகி, பசவகல்யாண் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளதால், வரும் 20ம் தேதி முதல் மாநில சுற்றுப்பயணம் தொடங்க கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் முடிவு செய்துள்ளார். அவருடன் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொள்வதுடன் பெங்களூரு, மைசூரு, பெலகாவி, கலபுர்கி ஆகிய நான்கு பொருளாதார மண்டலங்களில் பிரமாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.