×

புரோட்டா கடையில் பார்சல் வாங்கியவர் கூடுதல் குருமா கேட்டதால் அடித்து கொலை

சூலூர்: கோவை அடுத்த சூலூர் அருகேயுள்ள முத்துக்கவுண்டன்புதூரில் நேற்று இரவு புரோட்டா வாங்கிய ஒருவர், கூடுதல் குருமா கேட்டதற்காக அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கடை உரிமையாளர் மற்றும் ஊழியரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள முத்துக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (37). இவருக்கு திருமணமாகி 5 மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர், நேற்று இரவு 9 மணியளவில் அதே பகுதியில் உள்ள கரிகாலன் என்பவரது ஓட்டலில் புரோட்டா வாங்க சென்றார். அங்கு புரோட்டா வாங்கிய ஆரோக்கியராஜ், கூடுதலாக ஒரு பாக்கெட் குருமா வேண்டும் என்று பரோட்டா மாஸ்டர் முத்துவிடம் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஓட்டல் உரிமையாளர் கரிகாலனும், புரோட்டா மாஸ்டர் முத்துவும்  கூடுதலாக தரமுடியாது என்று கூறி, ஆரோக்கியராஜை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் கரிகாலன், மாஸ்டர் முத்து மற்றும் மற்றொரு ஊழியர் கருப்பசாமி ஆகியோர் ஆரோக்கியராஜை சரமாரி தாக்கி கீழே தள்ளியுள்ளனர்.

கீழே விழுந்த ஆரோக்கியராஜ் மயக்கமடைந்தார். அங்கேயே கிடந்த அவரை மீட்க, அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர். ஆம்புலன்ஸில் வந்தவர்கள் ஆரோக்கியராஜ் இறந்து கிடப்பதாக கூறி, திரும்பி சென்று விட்டனர். தகவலறிந்த ஆரோக்கியராஜின் உறவினர்கள் அங்கு வந்து, ஆரோக்கியராஜை மீட்டு கார் மூலம் சூலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் சோதித்துப் பார்த்து ஆரோக்கியராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், ஆரோக்கியராஜை அடித்து கொலை செய்த புரோட்டா கடைக்கு சென்றனர். அங்கு இருந்த மாஸ்டர் முத்துவை சரமாரியாக தாக்கினர்.

சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன்  தலைமையிலான போலீசார், புரோட்டா மாஸ்டர் முத்துவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரோக்கியராஜை அடித்து கொலை செய்ததாக ஓட்டல் உரிமையாளர் கரிகாலன், ஊழியர் கருப்புசாமி ஆகியோரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். புரோட்டாவிற்கு கூடுதல் குருமா கேட்டதற்காக, வாடிக்கையாளரை தாக்கி கொலை செய்த சம்பவம் முத்துக்கவுண்டன்புதூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : store ,Prota ,death , Murder
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!