சாம்ராஜ்நகர்: நாட்டுப்புற கலைஞர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்க தயாராக உள்ளது என கன்னடம், கலாச்சாரம் மற்றும் வனத்துறை அமைச்சர் அரவிந்த லிம்பாவளி தெரிவித்தார். சாம்ராஜ்நகரில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் பவனில் கர்நாடக நாட்டுப்புற அகாடமி சார்பில் நாட்டுப்புற கலையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழாவை அமைச்சர் அரவிந்த லிம்பாவளி தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கர்நாடக மாநிலத்தின் கடைசி எல்லையான சாம்ராஜ்நகர் மாவட்டம் நாட்டுப்புற கலை, இலக்கியம், சினிமா ஆகியவற்றில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த கலைகளின் சிறப்பை இன்றைய இளைய சமூதாயத்தினர் முன்னெடுத்து செல்லவேண்டும். கடந்த 2020ம் ஆண்டில் நாட்டுப்புற கலையில் சாதித்தவர்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காக்க மாநில அரசு எல்லா உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. நாட்டுப்புற கலைஞர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்து கொடுக்கும்’’ என்றார்.