வேலூர் : வேலூர் தொரப்பாடி எம்ஜிஆர் சிலை அருகே நன்னடத்தை கைதிகள் நடத்தும் சிறை பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் அருகே உள்ள கால்வாயில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளன. இதனை நேற்று மர்ம ஆசாமிகள் திடீரென தீ வைத்தனர். இதில் மள, மளவென தீ பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலாக மாறியது. மேலும், கால்வாயில் அமைக்கப்பட்டு இருந்த கேபிள்கள் ஒயர்கள் தீயில் எரிந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக வேலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) தணிகைவேல் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து பெட்ரோல் பங்க் 300 மீட்டர் தூரத்தில் இருந்ததால், பெரிய அளவிலான தீ விபத்து தவிர்க்கப்பட்டது.