விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சியினரின் பிரச்சார களம் வேறு வடிவத்திற்கு மாறியுள்ளது. அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெறுவதற்காக பல்வேறு விதமான வியூகங்களை வகுப்பது வழக்கம். தேர்தல் நடப்பதற்கு குறிப்பிட்ட சில மாதங்களுக்கு முன்பே, கட்சியின் தலைவர்கள் ஒவ்வொரு ஊராக சென்று மாநாடு நடத்துவார்கள். பிறகு அதிகாரப்பூர்வமான வேட்பாளர்களை அறிவித்தவுடன், அவர்களுடன் வீடு, வீடாக சென்று கட்சியின் சின்னம், வேட்பாளரின் பெயர் போன்றவற்றைக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்கள்.
ஆனால் தற்போது காலநிலை மாற்றத்தால், மக்கள் அதிக நேரம் வீடுகளில் இருப்பதில்லை. மேலும் கட்சியினர் நடத்தும் கூட்டங்களுக்கு வருவதும் குறைந்து வருகிறது. இதற்கு பலரும் வேலை, படிப்புக்காக வெளியில் சென்று விடுவதே காரணமாகும். மேலும் வீட்டில் இருப்பவர்களில் பலர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொள்வதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. எனவே இவர்களிடத்தில் தங்களது பிரச்சாரத்தை எளிதில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றால், அதற்கு புதிய யுக்தியை அரசியல் கட்சிகள் கையில் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சமூக வலைதளங்களை அதிக அளவில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதில் மூழ்கியிருப்பதே காரணம். எனவே இதனை பாலமாக பயன்படுத்தி பொதுமக்களிடத்தில், அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை கொண்டு சேர்த்து வருகின்றனர். தற்போது தேர்தலுக்கு குறைவான நாட்களே இருப்பால், சமூகவலைதளங்களில் பிரச்சாரம் செய்வதை கட்சிகள் முடுக்கி விட்டுள்ள. இதன்ஒருபகுதியாக தினந்தோறும் பல்வேறு இடங்களில் தாங்கள் நடத்தும் பொதுக்கூட்டம், மாநாடு, ஆர்ப்பாட்டம் போன்றவற்றை ‘லைவ்’ஆக சமூக வலைதங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் மீம்ஸ்களும் புதிது, புதிதாக உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சித்தலைவர்களும் தேர்தலுக்கு முன்பு என்ன பேசினார்கள், தற்போது என்ன பேசுகிறார்கள் என்பதை இணைந்து பரப்பி வருகின்றனர்.மேலும் பொதுமக்கள் எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய விஷயங்களை அடிப்படையாக வைத்து ஏராளமான மீம்ஸ்கள் உருவாக்கப்படுகின்றன. இது ஒருபுறம் கேலி, கிண்டலை ஏற்படுத்தியிருந்தாலும், மற்றொரு புறம் தேர்தலில் இந்தவகையிலான மீம்ஸ்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எனவே சமூக வலைதளங்களை சிறிய கட்சி முதல் பெரிய கட்சி வரை அனைவரும் தங்களது முக்கிய பிரச்சார களமாக பயன்படுத்தி வருகின்றனர்.