வாஷிங்டன்: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக அமெரிக்க நடிகை அமண்டா செர்னி குரல் கொடுத்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் எல்லை பகுதிகளில் 70 நாட்களுக்கு மேலாக பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் போராடு வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் சுவர்கள் எழுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இணையதள சேவை அந்த பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் கங்கனா ரனாவத் விவசாயிகள் போராட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், சர்வதேச பாப் ஸ்டார் ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரீஸ், ஆகிய வெளிநாட்டு பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் உண்மையை முழுமையாக அறிந்து கருத்துத் தெரிவிக்கும்படி, மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு அமெரிக்க நடிகை ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை அமண்டா செர்னி ட்வீட் பதிவில்; டெல்லி விவசாயிகள் போராட்டத்தை உலகமே கவனிக்கிறது; பிரச்சனைகளை புரிந்து கொள்ள நீங்கள் இந்தியராக இருக்க வேண்டும் அவசியம் இல்லை; மனிதநேயம் இருந்தாலே போதும் என கூறியுள்ளார்.