காஜியாபாத்: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டுள்ள முக்கிய போராட்டக்களங்களில் ஒன்றான காசிப்பூர் எல்லையி–்ல் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியிணை போலீசார் நேற்றும் தொடர்ந்தனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை சம்பவத்திற்கு பின்னர், விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் மூன்று முக்கிய எல்லைகளிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றும் காஜிப்பூர் எல்லையில் போலீசாரின் கெடுபிடிகள், பாதுகாப்பு பலப்படுத்தும் பணிகள் தொடர்ந்தன. இந்த பகுதிகளில் ஏற்கனவே இண்டர்நெட் சேவை முடக்கப்பட்டு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் பிப்ரவரி 2ம் தேதி வரை சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டது.
அதன்பின் நேற்று மேற்கொண்டு இண்டர்நெட் சேவை முடக்கம் நீட்டிக்கப்படவில்லை. இதனை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், காஜிப்பூர் எல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்டர்நெட் சேவையை பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிகாரிகள் போராட்டக்களத்தில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். அதிகம் பேர் இணையசேவையை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதன் காரணமாக இதுபோன்று தடங்கல்கள் வருவது இயல்பானது தான். ஆனால், சேவை முடக்கம் நீட்டிக்கப்படவில்லை என காஜியாபாத் எஸ்பி ஞானேந்திரா சிங் விளக்கம் அளித்தனர். இதுபற்றி பிகேயு சங்கத்தின் மீரட் மண்டல தலைவர் பவன் கட்டானா தெரிவிக்கையில், ”அரியானாவில் நடைபெற்ற மகாபஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொள்ள சங்க தலைவர் ராகேஷ் திகைத் மற்றும் பிற ஆதரவாளர்களுடன் செல்லும் முன்பு வரை காஜிப்பூரி–்ல் இணையசேவையை பயன்படுத்த முடியாத நிலைதான் இருந்தது ”என்றார்.