சென்னை: போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் மோதி, சிறுவன் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள சிக்னலில் நேற்று மாலை வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது கீழ்ப்பாக்கத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் நிலை தடுமாறிய கார் தாறுமறாக ஓடி சிக்னலுக்காக காத்திருந்த பைக் மற்றும் சைக்கிள் மீது மோதி சிக்னல் கம்பத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில், சைக்கிள் ஓட்டி வந்த சிறுவன் காமேஷ் (15) மற்றும் பைக்கில் இருந்த பிராசந்த் (29), முரளி (32) ஆகியோர் தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், 3 பேரையும் மீட்டுஅரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்துகுறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுனர் வேல்முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.