பெங்களூரு: கர்நாடகாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமனின் பங்களிப்பு மாநிலத்துக்கு எதுவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ராமலிங்கரெட்டி குற்றம்சாட்டினார். பெங்களூரு விதானசவுதா எதிரே இது தொடர்பாக ராமலிங்கரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ``மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் எதுவும் இருக்காது என்று முன்கூட்டியே தெரியும். அவர்கள் தற்போது அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். எதையும் விட்டு வைக்க மட்டார்கள். முதலீட்டாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்திக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எவ்வளவு நாட்கள் பா.ஜ. அரசு இருக்குமோ அவ்வளவு நாட்கள் முதலீட்டாளர்களுக்கு மட்டும் வசதியாக இருக்கும்.
அதேபோல், மத்திய நிதி துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் எப்போது பதவிக்கு வந்தாலும் எதையும் எதிர் பார்க்க முடியாது. மத்திய பா.ஜ. அரசு பொருளாதார நெருக்கடியிலிருந்து மேலே வர காங்கிரஸ் கட்சியின் பொருளாதார நிபுணர் குழுவினரிடம் உதவி பெற்றுக்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் யாருடைய ஆலோசனையும் பெறவில்லை. கர்நாடகாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்மலா சீதாராமனின் பங்களிப்பு மாநிலத்துக்கு எதுவும் இல்லை. பெங்களூருவில் மெட்ரோ திட்ட பணிகள் நடைபெற்று வருவதால் நிதி தேவைப்படுகிறது. இதனால் 14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தவிர விவசாயிகள், பொதுமக்களுக்கு எதையும் அறிவிக்கவில்லை. தற்போது பெட்ரோல், காஸ், டீசல் விலை தினமும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாகவுள்ளது. பட்ஜெட்டில் நாம் ஏதாவது எதிர்பார்த்திருந்தால் அது நம்முடைய தவறு ‘’என்றார்.