ஹாவேரி: வீரசைவ-லிங்காயத்து ஆகிய இரு வகுப்பும் ஒன்று தான். இதில் பிரிவினை கிடையாது என்று கொட்டூர் மடத்தின் மடாதிபதி கங்கன பசவவேஷ்வரசாமி தெரிவித்தார். ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகாவில் பசவண்ணர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. மடாதிபதி கங்கன பசவவேஷ்வரசாமி தலைமையில் பசவண்ணரின் தேர் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மடத்தில் நடந்த விழாவில் மடாதிபதி பேசும்போது கூறியதாவது:அகில இந்திய வீரசைவ மகாசபை சார்பில் பல ஆண்டுகளாக இவ்வகுப்பினருக்கு தனி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த போராட்டம் வீரசைவ மற்றும் லிங்காயத்து வகுப்பு என்ற இரண்டுக்குமான உரிமை போராட்டமே தவிர, இரண்டையும் வேறு வேறு வகுப்பினராக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக நடந்த போராட்டம் கிடையாது.
பசவண்ணரின் வழியை பின்பற்றி சிவநெறியை காப்பாற்றி வரும் வீரசைவ-லிங்காயத்து வகுப்பு இரண்டும் ஒன்றே. இதில் மாற்று கருத்து கிடையாது. நாம் சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த நமது ஆன்மிக குரு பசவண்ணர் போதித்துள்ளார். அவர் காட்டிய வழியில் செயல்பட வேண்டியது நமது கடமையாகும். வீரசைவ-லிங்காயத்து வகுப்பை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற முழக்கத்தை தொடர்ந்து எழுப்ப வேண்டும்’’ என்றார்.