பெங்களூரு: பேரவையில் கேள்வி பதில் நேரத்தின் போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பதில் அளித்தபோது கூறியதாவது: கொரோனா வைரசின் காரணமாக போலீசார் உயிரிழந்தால் அவரின் குடும்பத்திற்கு அரசின் சார்பில் 30 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இதுதவிர போலீஸ் துறை, இன்சூரன்ஸ் சார்பில் வழங்கப்படும் நிவாரணமும் கிடைக்கும். அரசு வழங்கும் 30 லட்சம் கூடுதல் நிவாரணம் ஆகும். கடந்த 2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டில் 41 போலீசார் இறந்துள்ளனர். உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலமாக தலா 20 லட்சம் என 4.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மற்ற போலீசாரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து நிவாரணம் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். போலீஸ் துறையில் 2002ம் ஆண்டு முதல் சுகாதார காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. 179 மருத்துவமனையில் போலீசார் குடும்பத்திற்கு பணமில்லா சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.