சாத்தூர்: சாத்தூரில் உள்ள பஸ்நிலையத்தில் ஏற்படும் இட நெருக்கடியை சமாளிக்க விரிவாக்கம் செய்து நவீனப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சாத்தூரில் கடந்த 1954ல் அண்ணா பவளவிழா பஸ்நிலையம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. அப்போதைய மக்கள் தொகை, வாகனப் பெருக்கத்தின் அடிப்படையில் இந்த பஸ்நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி, நடுவப்பட்டி, இருக்கன்குடி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, விளாத்திகுளம், நாகலாபுரம், உப்பத்தூர், கரிசல்பட்டி, ஏழாயிரம்பண்ணை, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், வெற்றிலையூரணி, தாயில்பட்டி, ஆலங்குளம், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. பொதுமக்களின் போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. இந்த பஸ்நிலையத்தை
1984, 2000ம் ஆண்டுகளில் புதுப்பித்தனர். ஆனால், விரிவாக்கம் செய்யப்படவில்லை.
ஆனால், தற்போது வாகனப் பெருக்கம், பயணிகளின் வருகை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் பஸ்நிலையத்தில் இடவசதியின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பயணிகள் பெரும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக காலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. எனவே, பஸ்நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலரகள் கூறுகையில், ‘பஸ்நிலையத்தில் இருக்கை வசதி இல்லை. பஸ்சுக்காக பொதுமக்கள் நிற்க வேண்டியுள்ளது. இடநெரிசலை தவிர்க்க, பஸ்நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்’ என்றனர்.