×

புயல், மழையால் பாதிப்பு: விவசாயிகள் அனைவருக்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் பெய்த கன மழை மற்றும் மிக கன மழையின் காரணமாக, 6,62,689.29 எக்டேர் வேளாண் பயிர்களும், 18,644.94 எக்டேர் தோட்டக்கலைப் பயிர்களும், ஆக மொத்தம் 6,81,334.23 எக்டேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதி வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்க வேண்டிய நிவாரணத் தொகையினைக் காட்டிலும், உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகையினை வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையிலேயே, மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் எக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகையான 13,500 ரூபாய் என்பதை 20,000 ரூபாயாக உயர்த்தியும், மானாவாரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையான எக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 7,410 ரூபாய் என்பதை, 10,000 ரூபாயாக உயர்த்தியும், பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக எக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 18,000 ரூபாய் என்பதை, 25,000 ரூபாயாக உயர்த்தியும் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.

விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 எக்டேர் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உச்சவரம்பைத் தளர்த்தி, பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்கவும் ஆணையிட்டுள்ளேன். இதன்படி, ஜனவரி மாதம் பெய்த கன மழையின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான 6,81,334.23 எக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சுமார் 11.43 லட்சம் விவசாய பெருமக்களுக்கு, 1,116.97 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக மத்திய அரசின் நிதியுதவியை எதிர்நோக்கி வழங்கப்படும். இந்நிவாரணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். அதே சமயம், மத்திய குழுவும் வரும் பிப்ரவரி மாதம் 3, 4 மற்றும் 5 தேதிகளில் பாதித்த பகுதிகளில் பார்வையிட உள்ளது.

Tags : Storm ,Chief Minister ,announcement , Storm, rain, damage, relief, CM, Notice
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...