சென்னை: கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கற்கும் வகையில் நாளொன்றுக்கு 2 ஜிபி இலவச இன்டர்நெட் டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இணைய வழி வகுப்புகள் மூலமாக மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்றிட, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, இன்று முதல் மே 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு (டேட்டா) பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் (டேட்டா கார்டுகள்) வழங்கிடும் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை தொடங்கி வைத்தார். திட்டத்தின் அடையாளமாக, 9 மாணவர்களுக்கு விலையில்லா தரவு அட்டைகளை வழங்கினார்.