×

மத்திய பட்ஜெட் உரையின் போது, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய இளம் கிரிக்கெட் அணியை பாராட்டினார் நிர்மலா சீதாராமன்!!

டெல்லி: 2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணியை வெகுவாக பாராட்டினார். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று 2-1 எனத் தொடரைக் கைப்பற்றியது. முதல் போட்டி இரண்டாவது இன்னிங்ஸில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்டு 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.

அதன்பின், விராட் கோலி தனது மனைவியின் பிரசவத்தின்போது அருகில் இருப்பதற்காக நாடு திரும்பினார். இதனால், எஞ்சிய போட்டிகளுக்கு அஜிங்கிய ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையிலான அணி மூன்று போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் தொடரைக் கைபற்றி அசத்தியது. குறிப்பாக, தொடர் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பேனில் நடைபெற்றது. இங்கு 1988ஆம் ஆண்டுக்குப் பின் ஆஸி ஒருமுறைகூட தோற்றதில்லை. இருப்பினும் இளம் இந்திய அணி அதிரடியாக விளையாடி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைத்தது.

இந்த நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சிறப்பாக விளையாடி டெஸ்ட் தொடரைக் கைபற்றி சாதனை படைத்த இந்திய அணிக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.“இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிபெற்றதை கிரிக்கெட்டை நேசிக்கும் நாடான இந்தியா மகிழ்ச்சியுடன் கொண்டாடியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். வெற்றிபெற மாட்டார்கள் எனப் பலர் கருத்து தெரிவித்தபோதும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிபெற்றுள்ளனர். வாழ்த்துக்கள்” எனக் கூறினார்.

Tags : speech ,cricket team ,Indian ,team ,Nirmala Sitharaman ,Australian , நிர்மலா சீதாராமன்!
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...