ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையுடன் நடந்த மோதலை சமாளிக்க முடியாமல் 2 தீவிரவாதிகள் சரணடைந்தனர். நேற்று முன்தினம் மண்டூரா கிராமத்தில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. இதைத் தொடர்ந்து, புல்வாமா மாவட்டத்திலுள்ள ககபோரா பகுதியிலும் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதனால், அந்த பகுதியை சுற்றி வளைத்தது ராணுவம். இந்த தேடுதல் வேட்டை திடீரென தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டையாக மாறியது. நேற்று இரவு முழுவதும் நீடித்த இந்த சண்டையில் அகில் அகமது லோன், ரவுப் இஸ்லாம் என்ற 2 தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். தப்பிக்க முடியாத தீவிரவாதிகள் வேறு வழியின்றி ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர். தாக்குதலில் காயமடைந்த அகில் அகமது சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.