நெல்லை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோயிலில் இன்று இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க நெல்லை சுவாமி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 22ம் தேதி நெல்லுக்குவேலியிட்ட வைபவம் நடந்தது. அன்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்–்த்திகளுடன் வீதிஉலா நடந்தது. 28ம் தேதி தைப்பூச தீர்த்தவாரி நிகழச்சி நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள தைப்பூச மண்டபத்தில் நடந்தது.
தொடர்ந்து நேற்று இரவு சௌந்திர சபா மண்டபத்தில் ரத முனிசிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் செளந்திரசாப நடராஜரின் திருநடன காட்சி நடந்தது. இதை தொடர்ந்து இந்த திருவிழாவின் முக்கிய கடைசி நாள் நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா இன்று இரவு நடக்கிறது. கோயில் வெளியில் சுவாமி சன்னதியில் உள்ள சந்திரஷ்கரணி என்ற வெளித்தெப்பத்தில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி அம்பாள் தெப்ப வலம் வந்து காட்சி தரும் வைபவம் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று இரவே தெப்ப மண்டபம் மின்னொளிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் தெப்ப சப்பரம் அமைக்கும் பணியும் நடந்தது.