×

டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாயுங்கள்... நாடாளுமன்ற வளாகத்தில் இடதுசாரி கட்சி எம்பிக்கள் போராட்டம்!!

டெல்லி : டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சிரோமணி அகாலிகதள எம்.பி.க்கள், ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி எம்.பி. ஹனுமன் பெனிவால் உள்ளிட்டோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லைகளில் பஞ்சாப், அரியானா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரம் விவசாயிகள் 2 மாதத்துக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மத்திய அரசுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்தன. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது.

ஆனால் விவசாயிகள் மீதான அடக்குமுறையின் காரணமாக குடியரசுத் தலைவர் உரையைப் 18 எதிர்கட்சிகள் புறக்கணித்தன. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம்லீக், ஆர்.எஸ்.பி., எம்.டி.எம்.கே., மக்கள் ஜனநாயக கட்சி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கட்சி,கேரள காங்கிரஸ் ஆம் ஆத்மி, ஷிரோமணி அகலாலிதளம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணித்தன.   இந்நிலையில் வேளாண் சட்டங்களை உறுப்பினர்களின் ஒப்புதலின்றி சட்டமாக நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி எம்.பி.க்கள் நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் நாடாளுமன்ற வாயிலில்களில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி நின்றவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்குமாறும் எம்பிக்கள் முழக்கமிட்டனர்.


Tags : Delhi ,MPs ,premises ,Left Party ,Parliament , MPs, struggle
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...