புதுடெல்லி: இந்தியாவில் நேற்று வரையில் 14 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவசர கால பயன்பாட்டுக்காக இரண்டு கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்ற அறிவிப்புடன், கடந்த ஜனவரி 16ம் தேதியன்று பிரதமர் மோடி இதனைத் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* கடந்த 16ல் இருந்து இதுவரையில் 14 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 47 ஆயிரத்து 58 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
* அதிகம் பயனாளர்களை கொண்ட மாநிலமாக கர்நாடகா முதல் இடத்தில் உள்ளது. இங்கு, ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 699 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
* கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திரா, ஒடிசா, உத்தரப் பிரதேச மாநிலங்களும் அதிக தடுப்பூசி பயனாளர்களை கொண்டுள்ளது.
* தெலங்கானா, மகராஷ்டிரா, பீகார், அரியானா, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தடுப்பூசிகள் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்றைய பலி 152
* நேற்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 662 ஆக உள்ளது.
* 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தொற்று பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 152 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
* இங்கிலாந்து வைரஸ் தொற்று 150 ஆனது
இங்கிலாந்தில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா, உலகம் முழுவதிலும் தற்போது 60 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் அந்த நாட்டில் இருந்து வந்தவர்களால் இந்த தொற்று பரவி வருகிறது. இதன் மூலம், நேற்று இந்த வைரசால் இந்தியாவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்தது. இவர்கள் அனைவரையும் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.