புதுடெல்லி: ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் சதீஷ் ரெட்டி. டெல்லியில் நேற்று நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பின் காணொலி மாநாட்டில் நேற்று இவர் பங்கேற்று பேசியதாவது: இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் பிரமாண்டமான அளவில் அதிகரிக்கும். அதேபோல், நமது நாட்டு ராணுவத்திலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் அதிகளவில் இடம் பெறும். சமீபத்தில் கூட, பல்வேறு நாடுகளுக்கு ஆகாஷ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. பாதுகாப்பு துறையில் தனியார் நிறுவனங்கள் இடம் பெறுவதற்காக மத்திய அரசும், எங்கள் அமைப்பும் எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.