புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள், ஐஏஎஸ் தேர்வில் பங்கேற்காமல் வெற்றி பெற்றதாக வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் இரண்டாவது மகள் அஞ்சலி பிர்லா. இவர், சமீபத்தில் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், கடந்த சில நாட்களாக அவர் முறைகேடாக இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாகவும், அவர் ஐஏஎஸ் தேர்வில் பங்கேற்கவில்லை என்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.
தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி புறவாசல் வழியாக அஞ்சலி நுழைந்து விட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த புகாரை அடுத்து அவர் தேர்வில் பங்கேற்றாரா? இல்லையா? என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில், 2019ம் ஆண்டு மெயின் தேர்வு தகுதி பட்டியலை சரிபார்த்ததில் அதில் அஞ்சலியின் பெயரும், தேர்வு எண்ணும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியல் யூபிஎஸ்சி இணையதளத்திலும் உள்ளது. இதனை தொடர்ந்து, அஞ்சலி முறையாக ஐஏஎஸ் தேர்வு எழுதிதான் வெற்றி பெற்றுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிரிப்புதான் வந்தது
வதந்தி குறித்து அஞ்சலி கூறுகையில், “நான் சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்காமல் வெற்றி பெற்றதாக வந்த வதந்திகளை பார்த்து எனக்கு சிரிப்பு வந்து விட்டது. வதந்திகள் கேட்பதற்கு நன்றாக இருக்கும். நான் அதுபோல தேர்வு எழுதாமல், முறைகேடு மூலமாக வரவில்லை. முறையாக தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதியே வெற்றி பெற்றேன்,” என்றார்.