பெங்களூரு: ஒசகோட்டை சுயேச்சை எம்எல்ஏ சரத் பச்சேகவுடா காங்கிரசில் ஐக்கியம் ஆகிறார். பெங்களூரு புறநகர் ஒசகோட்டை தொகுதி எம்எல்ஏவாக இருந்த எம்டிபி நாகராஜ் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் பாஜவின் சார்பில் எம்டிபி நாகராஜ் மக்களை சந்தித்தார். அதே நேரம் சுயேச்சையாக சரத் பச்சேகவுடா போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து பாஜவின் ஆட்சி அமைவதற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் என்ற ஒரே காரணத்திற்காக முதல்வர் எடியூரப்பா நாகராஜூக்கு எம்எல்சி பதவி வழங்கினார். அத்துடன் அமைச்சரவையிலும் எம்டிபி நாகராஜ் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் சுயேச்சை எம்எல்ஏ ஆக வெற்றி பெற்ற சரத்பச்சேகவுடா காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஒசகோட்டை சுயேச்சை எம்எல்ஏ சரத்பச்சே கவுடா முன்னாள் முதல்வரும் மாநில எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவை நேற்று சந்தித்து பேசினார். மாஜி சபாநாயகர் ரமேஷ்குமார் மற்றும் மாஜி அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா உள்ளிட்டோர் இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.