சென்னை: பள்ளிகள் திறப்பு மற்றும் அது தொடர்பான தொடர் நடவடிக்கைகளை கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அரசு நியமித்துள்ளது. தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று முற்றிலும் நீங்காத நிலையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவர்களுக்கு தொற்று ஏற்படாத அளவுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்ெகாண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பள்ளிகள் திறக்கும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகள் ஆகியவற்றை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அரசு நியமித்துள்ளது.
அந்த குழுவில் தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் ஜெயந்தி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநர் லதா, அதே துறையை சேர்ந்த கூடுதல் இயக்குநர் அமிர்தாேஜாதி, ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் கல்வித்துறையை சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மாவட்டவாரியாக பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். முறைசாரா கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் மதுரை மாவட்டத்துக்கும், சேலம்-ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள்- பள்ளிக் கல்வி இணை இயக்குநர் பொன்னையா, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு-இணை இயக்குநர் அமுதவல்லி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னதாக அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்கண்ட அதிகாரிகள் செல்வார்கள்.