பெங்களூரு: சிக்கமகளூருவில் கடந்த 3 நாட்கள் பெய்த மழையில் காபி செடிகள் மற்றும் நெற்பயிர்கள் சேதமடைந்திருப்பதால் 5 தனிப்படை அமைத்து ஆய்வு நடத்த மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் உத்தரவிட்டுள்ளார். மலைநாடு மாவட்டமான சிக்கமகளூருவில் ஏராளமான காபி தோட்டங்கள் உள்ளன. ஒரு சில இடங்களில் நெற்பயிர்களும் விளைவிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அறுவடை செய்ய உள்ள நிலையில், கடந்த 3 நாட்களாக மழை பெய்து அனைத்து பயிர்களும் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் தோட்ட உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் வழங்கவேண்டுமென்று அவர்கள் தரப்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
அதற்குள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் பாதிக்கப்பட்ட காபி தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது, விவசாயிகள், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற கலெக்டர், உடனே வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, 5 குழுக்கள் அமைத்து, ஆய்வு செய்வது மட்டுமின்றி, அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டார்.