சென்னை : சென்னையில் பெண்களிடம் ஆபாசமாக கேள்விகளை கேட்டு இணையதளத்தில் வெளியிட்ட யூடியூப் சேனல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Chennai talks என்ற யூடியூப் சேனலில் பெண்களிடம் ஆபாசமாக கேள்விகளை கேட்டு பதிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து சென்னை பெசண்ட் நகரைச் சேர்ந்த லட்சுமி என்பவர் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் Chennai talks யூடியூப் சேனல் உரிமையாளர் தினேஷ் குமார், ஒளிப்பதிவாளர் அஜய் பாபு, தொகுப்பாளர் ஆசான் பாட்ஷா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட அந்த யூடியூப் சேனலை முடக்கவும் யூடியூப் நிர்வாகத்தில் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களை கட்டுப்படுத்த சென்சார் போன்ற அமைப்புகள் உள்ளன. ஆனால் யூடியூப் சேனலை கட்டுப்படுத்த எந்த அமைப்பும் இல்லை. இதனால் புற்றீசலாக பெருகியுள்ள யூடியூப் சேனல்களில் ஆபாசம் கொடிகட்டி பறப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவை பாலியல் குற்றங்கள் அதிகரிக்க வழிவகுப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.