நாமக்கல்: கேரளா மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் பரவியது. இதைத்தொடர்ந்து நாமக்கல் மண்டலத்தில் இருந்து கேரளாவுக்கு முட்டை அனுப்புவது குறைந்துவிட்டது. இதையடுத்து முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று பண்ணை கொள்முதல் விலையில் 40 காசுகள் என்இசிசி (தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு) குறைத்தது. இதன்படி ஒரு முட்டையின் விலையை 460 காசில் இருந்து 420 காசாக என்இசிசி நிர்ணயம் செய்துள்ளது. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவிய பிறகு, நாமக்கல் மண்டலத்தில், கடந்த ஒரு வாரத்தில் முட்டை விலையில் 90 காசுகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு தினமும் முட்டை லாரிகள் சென்று வந்தாலும், அங்கு முட்டை விற்பனை குறைந்துவிட்டதால் அனுப்புவதும் குறைந்துவிட்டது. இது குறித்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில், முட்டை தேக்கம் ஏற்படுவதை தடுக்க சுமார் 4 கோடி முட்டைகளை குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைத்துள்ளனர் என்றனர்.