செய்யூர்: சூனாம்பேடு அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளிகளில் கடந்த 1970 முதல் 1990ம் ஆண்டு வரையில் படித்த முன்னாள் மாணவர்கள் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் விடுதலை செழியன் தலைமை தாங்கினார். பேரவை தலைவர் கோபுராஜ் முன்னிலை வகித்தார். சித்தாமூர் வட்டார கல்வி அலுவலர் பழனிவேல்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில், முன்னாள் மாணவ, மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு 25 பானைகளில் தனித்தனியே பொங்கலிட்டு அதனை சூரியபகவானுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு வட்டார கல்வி அலுவலர் பரிசுகளும் சான்றிதழ்களையும் வழங்கினார். அதன்பின், முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடலும் பின்னர் பாரம்பரிய இசை, கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.