நெல்லை: உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கொண்டாடும் மிக முக்கிய பண்டிகையான தைப்பொங்கல திருவிழா வருகிற 14ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து மறு நாள் மாட்டுப்பொங்கல் அதை தொடர்ந்து காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சந்தைகளில் காய்கனிகள் வரத்து அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தலைப்பொங்கல் கொண்டாடும் தம்பதிகளுக்கு பொங்கல் சீர் கொடுப்பதற்காக மக்கள் காய்கறிகள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்காக சந்தைகளில் குவியத்தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு ஓரளவு வடகிழக்கு பருவமழை பெய்துள்ளதால் கிழங்குவகை காய்கறிகள் இன்று முதல் சந்தைக்கு அதிகளவில் வரத்தொடங்கியுள்ளன.
வழக்கமான காய்கறிகள் தவிர பொங்கலை ஒட்டி பயன்படுத்தக்கூடிய, பிடி கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, சீனிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, பனங்கிழங்கு, சிறுகிழங்கு, கருணை போன்ற கிழங்கு வகைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்து இறங்குகின்றன. நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து இவை உழவர் சந்தைகளுக்கும் தனியார் காய்கனி சந்தைகளுக்கும் வந்தவண்ணம் உள்ளன. உழவர் சந்தைகளில் இன்று ஒரு கிலோ சிறு கிழங்கு 60 ரூபாய்க்கு விற்பனையானது. 2ம் ரகம் 55 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கத்தரிக்காய் விலை கிலோ ரூ.50 ஆக உள்ளது.
முருங்கைக்காய் வரத்து குறைவாக உள்ளதால் இதன் விலை கிலோ ரூ.95ஆக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.74க்கு விற்பனையாகிறது. தேங்காய் ஒரு கிலோ ரூ.44க்கு விற்கப்படுகிறது. கருணைகிழங்கு ரூ.42, பனங்கிழங்கு ரூ.50, வள்ளிக்கிழங்கு ரூ.48 எனற் விலையில் விற்பனையாகிறது. பாளை மகாராஜநகர் உழவர் சந்தைக்கு நேற்றுவரை சராசரியாக நாள்தோறும் 25 டன் காய்கறிகள் வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 5 டன் உயர்ந்து 30 டன் அளவிற்கும் மேலாக பொங்கல் காய்கறிகள் வந்துள்ளன. இவை அடுத்துவரும் 3 நாட்களில் இருமடங்காக உயர வாய்ப்புள்ளது.
இதையொட்டி தற்போது 100 கடைகள் உள்ள நிலையில் தேவைக்கு ஏற்ப உழவர் சந்தை வளாகத்தில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கவும் அதிகாலை முதல் விற்பனை நடைபெறவும் வேளாண்மைத்துறை துணை இயக்குனர் முருகானந்தம் ஆலோசனைப்படி நிர்வாக அலுலர் தாமரைச்செல்வி, ஆனந்தகுமார், பழனி உதவி நிர்வாக அலுவலர் திருமுருகன் ள்ிட்டோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.