சீர்காழி: எடமணல் ஊராட்சியில் ஜல்லிபெயர்ந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியம் எடமணல் ஊராட்சியில் மேலப்பாளையம் கிராமம் உள்ளது. இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளன. கடந்த ஆண்டு மேலப்பாளையம் கிராமத்தில் மட்டும் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை போடப்பட்டுள்ளது, அதன் அருகிலுள்ள மேலப்பாளையம் -திருநகரி சாலை ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை போடாமல் குண்டும் குழியுமாக சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள், செல்வதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றது. தற்பொழுது மேலப்பாளையம்- திருநகரி சாலையில் பள்ளி வாகனம், லாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மேலப்பாளையம் - திருநகரி சாலையை இதுவரை சீரமைக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் கண்டுகொள்வதில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இப்பகுதியில் உள்ள சாலைகளை ஆய்வு செய்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.