புதுடெல்லி: பசுவுடன் இருந்த கன்றுக்குட்டியை கொடூரமாக தாக்கி இம்சித்தவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கமல் சிங் என்பவர் முக்கியமான சில ஆவணங்களுடன் கிழக்கு டெல்லியில் நடந்து சென்ற போது, ஓரிடத்தில் பசுவும், கன்றுக்குட்டியும் சேர்ந்திருந்தன. திடீரென கன்றுக்குட்டி துள்ளி குதித்து கமல் மீது மோதியது. அதில் சிங்கின் கையில் இருந்த ஆவணங்கள் காற்றில் பறந்தன. அதனால் ஆத்திரம் அடைந்த சிங், ஆவணங்கள் காற்றில் மேலும் அடித்துக் கொண்டு போனால் என்னாவது எனும் கவலையின்றி, சாலையில் இருந்து கற்களை பொருக்கி, தன் மீது மோதிய கன்றுக்குட்டி மீது சரமாரியாக வீசினார். காயமடைந்த கன்றுக்குட்டி தரையில் சாய்ந்தது. அதற்குப் பின் ஆவணங்களை சேகரித்து சிங் அங்கிருந்து சென்றார்.
கன்றுக்குட்டி தாக்கப்பட்ட சம்பவம் முழுவதையும், அங்கிருந்த யாரோ, செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்ற, அந்த சம்பவம் வைரலாகி, போலீஸ் கவனத்திற்கும் சென்றது. அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக சம்பவ இடம் விரைந்து கன்றுக்குட்டியை சஞ்சய் காந்தி கால்நடை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். மேலும், வைரல் காட்சிகளில் இருந்து கமல் சிங்கை சரியாக அடையாளம் கண்டு, விலங்குகள் வதை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிங்கை கைது செய்தனர்.