×

இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் திருச்சி திரும்பிய 3 பயணிகள் மாயம்!: கொரோனா பரிசோதனைக்கு அஞ்சி உறவினர் வீட்டில் பதுங்கலா?

திருச்சி: இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் திருச்சி திரும்பிய 3 பயணிகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு அஞ்சி உறவினர்கள் வீட்டில் பதுங்கி உள்ளார்களா என காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உலகம் முழுவதும் பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல லட்சம் பேர் பலியாகியுள்ள நிலையில், மேலை நாடுகளில் இதன் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் உருமாறிய வீரியமிக்க கொரோனாவாக மாறியுள்ள நிலையில், அந்நாட்டில் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 58 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு கட்டாயம் உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து 105 இந்தியர்கள் விமானம் மூலம் நேற்று திருச்சி வந்தனர். இவர்களில் 102 பேரின் விவரங்கள் கண்டறியப்பட்டு அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் புதிய வைரஸ் தாக்கம் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

ஆனால் எஞ்சியுள்ள 3 பேர் விமான நிலையத்தில் இருந்து மாயமானது தெரியவந்தது. அவர்களது முகவரிகள் தவறாக இருப்பதால் மாயமானவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு பயந்து அவர்கள் மாயமானார்களா? என சுகாதாரத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாட்டில் உருமாறிய கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : passengers ,Trichy ,house ,relative ,Sneak ,England , UK, airplane, Trichy, passenger magic
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...