டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18.50 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,850,202 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 85,484,966 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 60,438,924 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,022 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்தாண்டு நவம்பர் மாதம் சீனாவில் முதல்முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலகெங்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவியது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்றைப் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர்.
இந்த உருமாறிய கொரோனா வகை வேகமாகப் பரவும் என்பதால் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் உலக அளவில் நேற்று ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு புதிதாக கொரோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 92 ஆயிரம் பேருக்கும், இங்கிலாந்தில் 55 ஆயிரம் பேருக்கும் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஆயிரத்து 387 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் உலகம் முழுவதும் நேற்று மட்டும் 7 ஆயிரத்து 100 பேர் கொல்லுயிரியால் கொல்லப்பட்டுள்ளனர். பெருந்தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியே 55 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது.