சென்னை: அறநிலையத்துறையில் உயர் அதிகாரிகளின் அலட்சியத்தால் வழிகாட்டி நெறிமுறை வெளியிடாத நிலையில், கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் முன்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில்களுக்கு சொந்தமாக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான திருமண மண்டபங்கள் உள்ளன. இது வாடகைக்கு விடப்படுகிறது. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கோயில் மண்டபங்களில் திருமண பதிவுக்கு தடை விதிக்கப்பட்டது. அதே போன்று கோயில்களில் திருமணம் செய்யவும் அனுமதியில்லை.
மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான மண்டபங்களில் திருமணம் முன்பதிவு செய்வது தொடர்பான வழிகாட்டி நெறிமுறையும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் தற்போது கோயில் மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கோயில் மண்டபங்களில் திருமணம் முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர். ஆனாலும், தற்போது வரை கோயில் மண்டபங்களில் வழிகாட்டி நெறிமுறை பின்பற்றுவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தனியார் திருமண மண்டபங்களில் வழிகாட்டி நெறிமுறையை பின்பற்றும் வகையில் வசதி செய்து தருகிறது. ஆனால், அறநிலையத்துறை மண்டபங்களில் இது போன்று வசதிகள் எதுவும் கிடையாது. இந்த சூழலில் வழிகாட்டி நெறிமுறையை வெளியிடா விட்டால் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுக்க வாய்ப்புள்ளது என்று அறநிலையத்துறை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.