×

ஆந்திராவில் வாலிபர் ஆணவக் கொலை

திருமலை: ஆந்திராவில் காதல் திருமணம் செய்து கொண்டதால் பிசியோதெரபி டாக்டர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம்  அதோனி கிஷ்டப்பா நகரை சேர்ந்தவர் ஆதாம் ஆஸ்மித், பிசியோதெரபி டாக்டர். இவர் அதேபகுதியில் வேறு சமூகத்தை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்தார். இதையறிந்த மகேஸ்வரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும், பெற்றோர்  எதிர்ப்பை மீறி ஐதராபாத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள அதோனில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆதாம் ஆஸ்மித் பணிக்கு சென்று மாலை வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் பைக்கை வழிமடக்கி நிறுத்தி தகராறு செய்துள்ளனர். மேலும், ஆதாம் ஆஸ்மித்தை கத்தியால் குத்தியும், கருங்கல்லை முகத்தில் போட்டும் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து தகவலறிந்த அதோனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அதோனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.கணவர் இறந்த செய்தியை கேட்ட மகேஸ்வரி மருத்துவமனைக்கு வந்து சடலத்தை பார்த்து கதறி அழுதார். அப்போது, எங்கள் காதல் திருமணம் பிடிக்காததால் எனது பெற்றோர் தான் எனது கணவரை ஆணவக்கொலை செய்துள்ளனர் என  தெரிவித்தார். இந்த பயங்கர சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Youth massacre ,Andhra Pradesh , In Andhra Pradesh, Valipar, arson
× RELATED தாய் கண் முன்னே இளைஞர் வெட்டிக்கொலை