சண்டிகர்: எம்எஸ்பி விலைக்கு உத்தரவாதம் அளிக்காவிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று அரியானா பாஜ முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியின் எல்லையில் விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் வரும் 4ம் தேதி 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாஜ மூத்த தலைவரான அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், ‘குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) உத்தரவாதத்தை உறுதிப்படுத்த முடியாவிட்டால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். நான் எம்எஸ்பி-க்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளேன்’ என்றார்.
ஏற்கனவே, அரியானா துணை முதல்வரும், ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவருமான துஷ்யந்த சவுதாலா கடந்த சில வாரங்களுக்கு முன் அளித்த பேட்டியில், ‘நான் ஆட்சியில் இருக்கும் வரை, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எதிரான எந்த நடவடிக்கையும் எடுக்க அனுமதிக்கமாட்டேன். நான் அவ்வாறு செய்தால், அதே நாளில் நான் என் பதவியில் இருந்து விலகிவிடுவேன்’ என்றார். ஆளும் கூட்டணியின் முதல்வர், துணை முதல்வர் ஆகிய இருவரும் எம்எஸ்பி விஷயத்தில் ஒரே மாதிரியாக பதவி விலகுவேன் என்று எச்சரித்து வருவதால், அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியானாவில் சமீபத்தில் நடந்து முடிந்த மேயர் தேர்தல்களில் இரண்டில் ஆளும் கூட்டணியான ஜனநாயக ஜனதா கட்சி வெற்றி பெற்றது. ஆளும் பாஜக கட்சி சோனிபட் மற்றும் அம்பாலாவில் தோற்றது. நகராட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சி மூன்றில் தோல்வியுற்றது. மாநிலத்தில் பாஜக கூட்டணியின் செல்வாக்கு குறைந்து வரும் நிலையில் முதல்வர், துணை முதல்வரின் அறிக்கைகள் முக்கியத்துவம் பெறுகிறது.