ஆரல்வாய்மொழி: குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டுக்கு தினசரி வெளி மாநிலம், வெளிமாவட்டம், உள்ளூரில் இருந்து பூக்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. பனிப்பொழிவு காரணமாக கடந்த சில வாரங்களாக பூக்கள் வரத்து குறைவு, திருமண நிகழ்ச்சி அதிகமாக இருந்ததால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. பின்னர் சற்று குறைந்தது. இந்நிலையில் நாளை புத்தாண்டை யொட்டி தோவாளை மார்க்கெட் இன்று களைகட்டியது. பூக்கள் வரத்து குறைவு மற்றும் வியாபாரிகள் போட்டி காரணமாக விலை அதிகரித்துள்ளது.
பூக்கள் விலை (ஒரு கிலோ அடிப்படையில்) மல்லி நேற்று ரூ.2000ல் இருந்து இன்று ரூ.2500க்கு விற்பனையானது. இதுபோல் பிச்சி ரூ.850ல் இருந்து 1250க்கும், மஞ்சள் கிரேந்தி ரூ.70ல் இருந்து 85க்கும், ஆரஞ்ச் கிரேந்தி ரூ.70ல் இருந்து 85க்கும், வெள்ளை செவ்வந்தி ரூ.200ல் இருந்து 220க்கும் மஞ்சள் செவ்வந்தி ரூ.190ல் இருந்து 200க்கும், பட்டன் ரோஸ் (பாக்கெட்) ரூ.200ல் இருந்து 210க்கும், பன்னீர் ரோஸ்(பாக்கெட்)ரூ.150ல் இருந்து 170க்கும், கொழுந்து ரூ.130ல் இருந்து 150க்கும், மரிக்கொழுந்து ரூ.130ல் இருந்து 150க்கும், சம்பங்கி ரூ.150ல் இருந்து 185க்கும் விற்பனையானது. கனகாம்பரம் இன்று ரூ1000க்கும், துளசி ரூ.40க்கு விற்பனையானது.