பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுப்பது தொடர்பாக கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் நேற்று முன்தினம் தொடங்கி இரண்டு நாட்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் செயல்தலைவர்கள் சலீம் அகமது, ஈஸ்வர் கண்ட்ரே, சதீஷ்ஜார்கிஹோளி, முன்னாள் எம்பி துருவநாராயண், மேலவை உறுப்பினர் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்த மண்டல வாரியாக தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி வரும் ஜனவரி 6ம் தேதி மைசூரு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பிளாக், தாலுகா தலைவர்கள், இன்னாள்-முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்கள், நகர உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னணி தலைவர்கள் வரை பங்கேற்கும் கூட்டம் மங்களூரு மாவட்டம், பண்ட்வாலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 8ம் தேதி பெங்களூரு மண்டல அளவிலான கூட்டத்தை ராம்நகரம் மாவட்டம், பிடதியிலும், 11ம் தேதி பெலகாவி மண்டல அளவிலான கூட்டத்தை ஹுப்பள்ளி மாநகரிலும் 15ம் தேதி கலபுர்கி மண்டல அளவிலான கூட்டத்தை கலபுர்கியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. கட்சியின் பிளாக் மற்றும் தாலுகா, நகர பகுதியில் வார்டு அளவிலான குழுக்களை வரும் ஜனவரி 25ம் தேதிக்குள் அமைக்க உத்தரவிடவும் முடிவு செய்யப்பட்டது.