சென்னை: சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற திருமண விழாவில், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில், தமிழக அரசை அவமரியாதையாக பேசியதாக ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதேபோல், உள்ளாட்சி துறையில் ஊழல் நடப்பதாகவும், சென்னை மாநகராட்சியில் எம்.சாண்ட் வாங்கியதில் ரூ.100 கோடி ஊழல் செய்திருப்பதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து கருத்து தெரிவித்தது.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட பெண்களை கைது செய்ததை கண்டித்து கருத்து தெரிவித்தது என மொத்த 6 அவதூறு வழக்குகள் சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் ஸ்டாலின் மீது தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தது. மு.க.ஸ்டாலின், நேரில் ஆஜராகினார். நீதிபதி, வழக்கை விசாரித்து ஜனவரி 29க்கு ஒத்திவைத்தார்.
அவதூறு வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பேன்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு: ஆளுங்கட்சியின் தவறுகளை, ஊழல்களை விமர்சிப்பது எதிர்க்கட்சியின் முக்கிய கடமை. அதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம். அவதூறு வழக்குகள் போட்டு திமுகவின் ஜனநாயக கடமையை தடுக்கவும் முடியாது, மிரட்டவும் முடியாது. திமுகவின் பேச்சுரிமையை, எத்தனை வழக்குகள் போட்டாலும் பழனிசாமியால் தடுக்க முடியாது. என் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பேன். அதிமுகவின் ஊழல்களை ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அம்பலப்படுத்துவோம்.