சென்னை: வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் பணிகளை ஜனவரி 2வது வாரத்தில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் விம்கோ நகர் இடையிலான 9.1 கி.மீ நீட்டிப்பு மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இவ்வழித்தடத்தில் சேவையை தொடங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக பணிகள் தடைபட்டது. இவ்வழித்தடத்தில் தியாகராயா கல்லூரி, தண்டையார்பேட்டை ஆகிய 2 ரயில் நிலையங்கள் சுரங்கபாதையிலும், மற்ற 6 நிலையங்கள் உயர் மட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒருசில ரயில் நிலையங்களில் மேற்கூரை அமைக்கும் பணி மட்டும் நடைபெற்று வருகிறது. எனவே, வரும் ஜனவரி மாதம் இவ்வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக டீசல் ரயில் இன்ஜின் மற்றும் மெட்ரோ ரயில்கள் மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிபெற்றதை தொடர்ந்து, வரும் ஜனவரி மாத 2வது வாரத்தில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் இவ்வழித்தடத்தில் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.