சென்னை: பாசன உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.2131 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதில் ரூ.737 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை மேற்கொள்ளாமல் நீர்வளநிலவள திட்ட இயக்குனர் அலுவலகம் கிடப்பில் போட்டு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. பாசன கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் நீர்வளநிலவள திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.2131 கோடி செலவில் 4778 ஏரிகள் மற்றும் 477 அணைக்கட்டுகள் புனரமைத்தல் உள்ள பணிகளை மேற்கொள்ள கடந்த 2017ல் தமிழக அரசு முடிவு செய்தது.
மூன்றாவது கட்டமாக 9 உபவடிநிலங்களில் ரூ.167.49 கோடி செலவில் மாநிலம் முழுவதும் 329 ஏரிகள், 56 அணைக்கட்டுகள், 4 கால்வாய்கள், 11 நீர்வளத்து கால்வாய்கள், 16 செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்படுகிறது. இதறகாக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிக்கையில், ஏரிகளின் பரப்பளவு, அகலம், நீளம், நீர்வரத்து கால்வாய்களின் விவரங்கள் மற்றும் ஏரிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் தொடர்பாக முழு விவரங்கள் இல்லை. இதனால், அந்த அறிக்கைக்கு உலக வங்கி ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில், தற்போது, வரை ரூ.1394 கோடி மட்டுமே உலக வங்கியிடம் நிதி பெறப்பட்டுள்ளது.
மேலும், ரூ.737 கோடி நிதி பெற வேண்டியுள்ளது. ஆனால், இந்த நிதியை பெற எந்த வித நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை. குறிப்பாக, திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து ,தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும். இதனால், அந்த ஆண்டு உலக வங்கியிடம் ஒப்புதல் பெற்று பணிகளை தொடங்குவது சாத்தியமில்லாத ஒன்று. அதே நேரத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தான் இது போன்று புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியும். மேலும், காலம் கடந்தால் நிதியை பெறுவது கடினம் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.