×

தமிழ் மொழியின் மீது பற்றும், பாசமும் கொண்ட முனைவர் தொ. பரமசிவம் மறைவு தமிழ் அறிஞர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும் : முதல்வர் பழனிசாமி!!

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின்
இரங்கல் செய்தி :

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளரும், எழுத்தாளரும், பேராசிரியரும், மாணவர்களாலும், வாசகர்களாலும் தொ.ப என அன்போடு அழைக்கப்பட்ட  முனைவர் தொ.பரமசிவன் அவர்கள் நேற்று (24.12.2020) உடல் நலக் குறைவால் காலமானார்  என்ற செய்தியை  அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
    
முனைவர் தொ. பரமசிவன் அவர்கள் இளையான்குடியில் உள்ள ஜாகிர்உசேன் கல்லூரியிலும், மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் பேராசிரியராகவும் மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை தலைவராகவும் பணியாற்றியவர்.முனைவர் தொ. பரமசிவம் அவர்கள் பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர்,  போன்ற பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தமிழ் நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு வரலாற்று வரைவுத் திட்டத்தில் உறுப்பினராக பணியாற்றியவர். பல நூல்களை எழுதியவர். இவர் எழுதிய அழகர் கோயில் மற்றும் அறியப்படாத தமிழகம் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இதில் அழகர் கோயில் என்ற நூல். கோயில் ஆய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

2017-ம் ஆண்டு உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் முனைவர் தொ. பரமசிவம் அவர்களுக்கு உலகத் தமிழ் பண்பாளர் விருது வழங்கி கௌரவித்தது. தமிழ் மொழியின் மீது பற்றும், பாசமும் கொண்ட  முனைவர் தொ. பரமசிவம் அவர்களின் மறைவு அவர்தம் குடும்பத்திற்கும், தமிழ் அறிஞர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Dr. ,disaster ,Tamil ,Palanisamy ,scholars ,Paramasivam ,Tamil Nadu , Tamil language, Vol. Paramasivam's demise, Chief Minister Palanisamy
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!