சிவகங்கை: விவசாயிகள் என்ற போர்வையில் போலியான ஆட்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர் என அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கையில் கல்வித்துறை, வருவாய்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் துவங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. விவசாயிகள் என்ற போர்வையில் போலியான ஆட்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர். அரசின் மீது வேண்டுமென்றே குற்றங்களை கூறி வருகின்றனர். ரவுடிகளும் ஊடுருவி அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுகிறது என்றே முதல்வர் கருத்து தெரிவித்தார்’’ என்றார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என, விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை போலியான ஆட்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.