×

எம்.டி.சி.யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆயுட்கால சான்று சமர்ப்பிக்கலாம்: மேலாண் இயக்குநர் அறிவிப்பு

சென்னை: எம்.டி.சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆயுட்கால சான்றிதழை பணிமனையிலேயே சமர்ப்பிக்கலாம் என மேலாண் இயக்குநர் இளங்கோவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில், ஏறத்தாழ 13,700க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்றுள்ளோர்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி நம்பகத்தின் வாயிலாக, ஓய்வூதியமானது வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியதாரர்கள், ஒவ்வொரு ஆண்டும், தங்களது ஆயுட்காலச் சான்றிதழை இப்போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்து வருகிறார்கள்.

ஓய்வு பெற்றோரின் வயது முதிர்வு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, தங்களது ஆயுட்காலச் சான்றிதழை இனிவரும் காலங்களில், தாங்கள் கடைசியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற அலுவலகம், பணிமனையிலேயே சமர்ப்பித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் 2021ம் ஆண்டிற்கான ஆயுட்காலச் சான்றிதழை, வரும் ஜனவரியில் தொடங்கி, மார்ச் 15ம் தேதிக்குள்ளாக, அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தலைமையகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தலைமையகத்திலும், பட்டு லாஸ் சாலை தொழிற்கூடத்தில், மண்டல தொழிற்கூடத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், அந்தந்த அலுவலகத்தில் ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

மேலும், கே.கே.நகர் பயணச்சீட்டு அச்சகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் கே.கே.நகர் பணிமனையிலும், குரோம்பேட்டை பேருந்து கூடுகட்டும் பிரிவில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் குரோம்பேட்டை-1 பணிமனையிலும் தங்களின் ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்கலாம். மேலும், விடுபட்டவர்கள் தலைமை அலுவலகத்தினை அணுகி, தங்களின் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். ஓய்வூதியப் பிரிவு 044-2345 5801 - Extn.268 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Retirees ,MDC , Retirees working in MDC can submit life certificate: Managing Director Notice
× RELATED சென்னை மாநகர காவல் துறையில்...