மதுரை: மதுரையில் ரூ.21 கோடி வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபரை மத்திய ஜிஎஸ்டி ஆணையரக அதிகாரிகள் கைது செய்தனர். மதுரை, அழகப்பா நகரை சேர்ந்த தொழிலதிபர் கனகரத்தினம் (47). இவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் நிறுவனம் பீ.பி.குளத்தில் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு முறையாக ஜிஎஸ்டி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்திற்கு புகார் சென்றது.
இதையடுத்து அவரது நிறுவனத்தில் கமிஷனர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில் போலியான ரசீதுகளை சமர்ப்பித்து ஜிஎஸ்டி செலுத்தாமல் ரூ.21 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததாக தெரிந்தது. இதைத்தொடர்ந்து தொழிலதிபர் கனகரத்தினத்தை மத்திய ஜிஎஸ்டி ஆணையரக அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.