பெங்களூரு: தன் மீது தொடரப்பட்டுள்ள நில விடுவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. மாநில முதல்வராக எஸ்.எம்.கிருஷ்ணா இருந்தபோது, பெலந்தூர் ஏரி அமைந்துள்ள பகுதியில் தொழில்பேட்டை உருவாக்க நிலம் கையகப்படுத்தும் படி கர்நாடக மாநில தொழில் வளர்ச்சி கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதையேற்று நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் சில தொழிற்
சாலைகள் நிலம் பெற்று கம்பெனிகள் தொடங்கியது.
இதனிடையில் தொழிற்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்திய நிலத்தில் 400 ஏக்கர் நிலம் தவறாக பயன்படுத்தியதாகவும் அதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே உதவி செய்துள்ளதாக அவருக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரணை நடத்திய நீதிமன்றம், போதிய ஆதாரமில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் 2008 முதல் 2011 வரை மாநில முதல்வராக எடியூரப்பா இருந்தபோது, தொழில்பேட்டைக்கு ஒதுக்கீடு செய்த நிலத்தில் 8.41 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டது (டிநோடிபிகேஷன்) இந்த நிலம் விடுவிக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாசுதேவரெட்டி என்பவர் லோக்ஆயுக்தா நீதிமன்றத்தில் கடந்த 2013ம் ஆண்டு புகார் கொடுத்தார். இதன் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி கடந்த 2015ம் ஆண்டு லோக்ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதனிடையில் தனக்கு எதிராக லோக்ஆயுக்தாவில் பதிவு செய்துள்ள நில விடுவிப்பு வழக்கை ரத்து செய்யும்படி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முதல்வர் எடியூரப்பா மனு தாக்கல் செய்தார். அம்மனு நேற்று நீதிபதி ஜான்மைக்கல் டிகுன்ஹா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. முதல்வர் எடியூரப்பா சார்பில் ஆஜரான வக்கீல் வாதம் செய்தார். அப்போது நில விடுவிப்பு வழக்கிற்கும் மனுதாரருக்கும் துளியும் சம்மந்தமில்லை. அரசியல் ரீதியாக பழி வாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து லோக்ஆயுக்தா மற்றும் மூல மனுதாரர் வாசுதேவரெட்டி ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிடும்போது, நில விடுவிப்பு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதற்கான ஆதாரம் உள்ளதாக தெரிவித்தனர். வக்கீல்கள் வாதம் முடிந்தபின் நீதிபதி வழங்கிய உத்தரவில், இப்புகாரில் மனுதாரருக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதால் வழக்கை ரத்து செய்யக்கோரும் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். இந்த தீர்ப்பின் மூலம் முதல்வர் எடியூரப்பா சட்ட சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொழில்பேட்டைக்கு ஒதுக்கீடு செய்த நிலத்தில் 8.41 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டது.இந்த நிலம் விடுவிக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாசுதேவரெட்டி என்பவர் லோக்ஆயுக்தா நீதிமன்றத்தில் கடந்த 2013ம் ஆண்டு புகார் கொடுத்தார்.