திருவண்ணாமலை: வங்கிக்கடன் செலுத்த நெருக்கடி கொடுத்ததால் மனமுடைந்த விவசாயி குடும்பத்துடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேரில் மனு அளிக்க நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று வந்திருந்தனர். அவர்கள் அலுவலக நுழைவாயிலில் வைத்திருந்த பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர். இந்நிலையில், கலெக்டர் அலுவலகம் முன்பு செங்கம் தாலுகா, மேல்முடியனூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சரவணன்(50) என்பவர் திடீரென மனைவி, 2 மகள்கள் மற்றும் மகனுடன் தீக்குளிக்க முயன்றார். அவரை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். விசாரணையில் அவர், எனது விளை நிலத்தில், தோட்டக்கலைத்துறை மூலம் மலர்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்ய 47 லட்சம் மதிப்பில் பசுமைக் குடில் அமைத்தேன். இதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 20 லட்சம் கடன் வாங்கினேன்.
அரசு தரப்பில் 8.90 லட்சம் மானியம் கிடைத்தது. மேற்கொண்டு என்னுடைய வீட்டை விற்று செலவு செய்தேன். இந்நிலையில், கடந்த 29.5.2019 அன்று வீசிய புயலால், பசுமை குடில் முழுவதுமாக சரிந்து சேதமாகிவிட்டது. இதனால், வங்கிக்கடன் தொகையை திரும்பி செலுத்த இயலவில்லை. நிலத்தை பார்வையிட்ட வேளாண் அதிகாரிகள், முழுமையாக ேசதமடைந்ததை உறுதி செய்து, அறிக்கையும் அளித்துள்ளனர். ஆனாலும், கடன் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என வங்கி நிர்வாகம் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கிறது. எனவே, வேறு வழியின்றி தீக்குளிக்க முயன்றேன் என்றார்.