பெங்களூரு: பா.ஜவுடன் மஜத இணைவதால் எதுவும் நடக்காது. ஆனால் மஜத தகுதியிழந்து விடும். மதசார்ப்பற்ற தத்துவங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் ஒதுங்கிவிடுவார்கள் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது: சட்டப்பேரவை தேர்தல் வருவதற்கு இன்னும் 2 ஆண்டு மூன்று மாதங்கள் உள்ளது. இதனால் அடுத்த முறை நான் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யவில்லை. தற்போது பாதாமி தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறேன். பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதியில் நான் போட்டியிடுவது தொடர்பாக எம்.எம்.ஏ. ஜமீர்அகமதுகான் என்னிடம் ஆலோசனை நடத்தவில்லை. அதேபோல், ஜமீர்அகமதுகான் ராம்நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து எந்த தகவலும் கிடையாது.
நான் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் மாநிலத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு அமைந்திருக்காது என்று தெரிவித்தேன். கட்சி மேலிட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூட்டணி ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டேன். அரவிந்தலிம்பாவளி என்ன கூறினாலும் முதல்வர் எடியூரப்பா கூறுவதே இறுதியானது. தற்போது மஜத-பா.ஜ. இணைப்பு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இது இறுதியானது. பா.ஜ.வின் பி.டீம் மஜத குறித்து அதிகமாக பேசுவதில்லை. அவர்களின் நடவடிக்கையால் கட்சி நிர்வாகிகளுக்கு வருத்தம் ஏற்படும். வரும் நாட்களில் மஜத இருக்காது. பா.ஜவுடன் மஜத இணைவதால் எதுவும் நடக்காது. ஆனால் மஜத தகுதியிழந்து விடும். மதசார்பற்ற தத்துவங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் இணைப்பிலிருந்து ஒதுங்கிவிடுவார்கள். சி.எம்.இப்ராஹிம் மஜதவில் சேருவதில்லை. காங்கிரஸ்சில் தான் இருப்பார். அவருக்கும் எனக்கும் நல்ல நட்பு உள்ளது இதனால் என்னை குறித்து பேசி வருகிறார்.
இஸ்லாமிய மக்களுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் பதவி வழங்குவதில் எந்த குழப்பமும் கிடையாது. நேரம் வரும் போது வழங்கப்படும். குலாம்நபி ஆசாத், அகமதுபாட்டீல் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் உயர் பதவியில் உள்ளனர். ஏ.பி.எம்.சி. பந்த் விஷயமாக எதை கேட்க வேண்டுமோ அதை அரசுக்கு கடிதம் மூலம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்று கடிதம் எழுதியும் பதில் வரவில்லை. மாநில அரசு தனியார் கல்வி நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. ஒரு ஆசிரியர் மூலம் ஆன்லைன் பாடம் நடத்தியுள்ளனர். அப்படியிருக்கும் போது முழு கட்டணத்தை கட்ட வேண்டும் என்று கல்வி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வருகிறது. இதை சரி செய்வது யார் என்று கேள்வி எழுப்பினார். அரசு இவர்களுடன் இணைந்துள்ளது. இதனால் பெற்றோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்’’ என்றார்.